Friday, December 19, 2014

சங்ககாலச்சேதி

சங்ககாலத்தில்... என்றாலே ஓடிவிடுகிறான் இன்றைய தமிழன்.
"வரலாறு" படிப்பது ஏன் என்று கொஞ்சம் பார்ப்போமா?
நேரடியாக மோதமுடியாத வல்லரசான ரோமன் பேரரசை சுற்றுப்பாதையில் சென்று ஆல்ப்ஸ் பனிமலையை ஏறி இறங்கி ஹனிபல் நிர்மூலமாக்கினான்.
இது நடந்து 2000 ஆண்டுகள் கழித்து மாவீரன் நெப்போலியன் அதேபோல ஆல்ப்ஸ் மலையைக் கடந்து சுற்றுப்பாதையில் சென்று ஆஸ்திரியாவை வென்றான்.
ஐரோப்பா கண்டத்தையே கைப்பற்றினான்.
பிறகு நெப்போலியன் ரஷ்யநாட்டின் மீது குளிர்காலத்தில் படையெடுத்துச்சென்றதால் தோற்றான்.
இதுநடந்து 150ஆண்டுகள் கழித்து ஹிட்லர் ஐரோப்பா கண்டத்தையே கைப்பற்றினான். நெப்போலியனின் வரலாறை ஹிட்லர் கவனத்தில் கொண்டிருந்தால் வெற்றி மேல் வென்றி குவித்த நாஜிப்படைகள் வலிமைகுறைந்த ரஷ்ய படையிடம் குளிர்காலத்தில் தோற்று மண்ணைக்கவ்வியிருக்காது.
பழங்காலத்தில் நடந்ததை அறிவது இன்றியமையாதது என்பதை வலியுறுத்தவே ஐரோப்பாவரை செல்லவேண்டிவந்தது.
மற்றபடி இந்தப் பதிவு போர்பற்றியது அன்று. நாகரீகம் பற்றியது. இல்லறம் பற்றியது.
-----------------
சங்ககாலத்தில் குடும்பம் என்கிற அமைப்பு தோன்றாதபோது கூட்டமாக வாழ்ந்த இனங்களில் எவரும் எவருடனும் சேர்ந்து பிள்ளைபெறலாம் என்ற நிலை இருந்தது.
பிறகு ஒருவனுக்கு ஒருத்தி என்கிற முறை, திருமணம், நிலையான இடத்தில் வாழ்க்கை, குடும்ப அமைப்பு ஆகியன தோன்றின.
ஆனாலும், பழைய முறைப்படி திருமணம் முடிக்காமல் வாழ்ந்தவர்களும் இருந்தனர். இப்படிப்பட்டோர் பரத்தை என்றும் இவர் ஊரில் வாழ்ந்த பகுதி 'பரத்தைச் சேரி' (சேரி=சேர்ந்துவாழும் இடம்) அழைக்கப்பட்டது.
இவர்கள் குடும்பமாக வாழ்வோரைப் போலவே மதிக்கப்பட்டனர்.
--------------
பரத்தை ஒருத்தி தன் தோழியிடம் தன்னை நாடிவரும் தலைவனைப் பற்றிக் கேலியாகப் பின்வருமாறு கூறுகிறான்.
எம்இல் பெருமொழி கூறித் தம்இல்
கையும் காலும் தூக்கத் தூக்கும்
ஆடிப் பாவை போல
மேவன செய்யும்தன் புதல்வன் தாய்க்கே.
(குறுந்தொகை:8)
என் வீட்டிற்கு வந்தால், "தான் அப்படி, தான் இப்படி" என்றெல்லாம் ஓங்கி பேசுவான். ஆனால் தன் வீட்டிற்குப் போய் விட்டாலோ, அங்குள்ள தன் மகனின் தாயாகிய அவனது மனைவியிடம் எப்படி நடந்துகொள்வான் தெரியுமா?? நாம் நம் கையையும் காலையும் தூக்கத் தானும் அது போலவே தூக்கும், கண்ணாடியில் தெரியும் நிழற்பாவைபோல அவள் விருப்பப்படியெல்லாம் ஆடுவான்.
பரத்தைக்குத் தலைவன் வீட்டுக்குச் சென்றுவரும் உரிமைகூட இருந்ததோ என்னவோ?
----------------------
தலைவன் பரத்தையை நாடிச் சென்றுவிட்டு வீடு திரும்புகிறான். அவனை வீட்டுவாசலிலேயே நிறுத்தி தலைவி கேள்வி கேட்கிறாள். தலைவன் உடனே தலைவியின் காலில் விழுந்து தான் பரத்தை வீட்டுக்குச் சென்றது தவறுதான் என்றும் அதற்காக பொறுத்தருளுமாறும் மன்றாடுகிறான். உள்ளம் உருகிப்போன தலைவி அவனை தூக்கி "நீ இப்படிக் காலில் விழுவதை நீ காதல் கொண்ட என் தங்கைகளான பரத்தைகள் கண்டால் சிரிப்பார்களே?!" என்று கேலியாகக் கூறுகிறாள்.
அடிமேல் வீழ்ந்த கிழவனை நெருங்கி
காதல் எங்கையர் காணின் நன்று என...
தொல்காப்பியம் (கற்பியல்:6)
பரத்தைகளை தங்கைகள் என்று அக்காலப்பெண்கள் குறிப்பிடும் அளவுக்கு அப்பெண்களுக்கு மதிப்பு இருந்துள்ளது.
---------------
மேற்கண்ட இருபாடல்களிலிருந்தும் ஆண்கள் வீட்டில் பெண்களுக்கு அடங்கிநடந்தது தெரிகிறது. அதுபோல, அக்காலத்தில் வேட்டையாடுதலிலும் போர்புரிவதலிலும் ஆண்கள் ஈடுபட்டதால் ஆண்களின் உயிரிழப்பு பெண்களின் உயிரிழப்பைவிட அதிகமாக இருந்திருக்கலாம். அதனால் பெண்கள் எண்ணிக்கை ஆண்களைவிட அதிகமாக இருந்திருக்கும். அப்போது தலைவன்(கிழவன் அதாவது ஆண்) தலைவி(கிழத்தி)யை மணமுடித்தோடு காமக் கிழத்தி (வைப்பாட்டி)கூட வைத்துக்கொண்டனர்.
அப்போதைய சூழலுக்கு அது சரியாக இருந்தது.
இதனால் பெண்கள் அடிமைநிலையில் வாழ்ந்ததாகத் தெரியவில்லை.
திருமணச்சீர் (வரதட்சணை) வாங்கும் பழக்கமானது அப்போது இல்லை. மாறாக பரிசம் (பணம்) கொடுத்து மணப்பெண்ணை அழைத்துவரும் முறை இருந்துள்ளது.
-------------------
பரத்தைப் பெண்கள் மட்டுமன்றி ஆண் பரத்தர்களும் இருந்துள்ளனர்.
பெண்ணியலா ரெல்லாருங் கண்ணிற் பொதுவுண்பர்
நண்ணேன் பரத்தநின் மார்பு.
திருக்குறள்:1311
'புலவி நுணுக்கம்' என்ற அதிகாரத்தில் வள்ளுவர் பெண்கள் எப்படியெல்லாம் சின்னச் சின்ன காரணங்களைக்கொண்டு தலைவனிடம் ஊடல் செய்வார்கள் என்று விவரிக்கிறார். அதில் மேற்காணும் குறள் வருகிறது.
தலைவனை பெண்கள் பலரும் விரும்புவதைக் கண்டு பொறாமை கொண்டு தலைவி தலைவனிடம்,
பெண் இயல்பு உள்ள அனைவரும் பொதுப்பொருள் போல உன்னை தன் கண்களால் விழுங்குகிறார்கள் (பார்த்து ரசிக்கிறார்கள்) பரத்தனுக்கு ஈடான உன்னை (உன் மார்பை) நான் இனித் தழுவமாட்டேன்" என்று சினந்துகூறுகிறாள்.
சிலப்பதிகாரத்தில் . "வம்பப் பரத்தர் வறுமொழி யாளர்' என்ற சொற்றொடர் வருகிறது.
கோவலனும் கண்ணகியும் மதுரைக்குச் செல்லும்போது, கவுந்தியடிகளும் சேர்ந்துகொண்டார். அப்போது வழியில் இரு பரத்தர்கள் அவர்களைச் சந்தித்ததாகக் கூறப்பட்டுள்ளது.
ஆகவே, சங்ககாலத்தில் தமிழர் வாழ்வியலில் பெண்ணடிமை நிலவியதாகக் கூறவியலாது.
கற்பு என்பது காலத்திற்கு காலம் மாறுவது ஆண், பெண் இருவருக்கும் பொதுவானது.
போரும் அரசியலும் கற்பியலும் மிகப் பழமையானவையும் நெருங்கிய தொடர்புடையவையும் ஆகும்.
Politics is war without blood,war is politics with blood.
Politics is the second oldest profession,and the first is prostitution.

வெளிவேலை[OnSite]

“Have you been to states before” ?
“No, Haven’t yet”. (எங்க..நமக்கு தெரிஞ்ச ஸ்டேட்ஸ் பெங்களூர், கேரளா அப்பறம் ஆந்திராதான்)
“Any other country” ?
 “No”.
“What are you man, You have enough experience..Should have been to onsite atleast once”
 “yeah…I could have been… But…”
        ‐இந்த மாதிரி ஐடி இண்டஸ்ட்ரீல ஒரு நாளைக்கு ஒம்பது பேராவது ஒம்பது எடத்துலே பேசிட்டு இருப்பாங்க..

 “அல்மோஸ்ட் என்னோட பிரண்ட்ஸ், பேட்ஜ் மேட்ஸ் எல்லாரும் ஆன்சைட்ல இருக்காங்க, நமக்கெங்க, கருமம் அதுக்கெல்லாம் நேரங்காலம் வரணுங்க”ன்னு முக்குக்கு மூணு பேராவது மூக்கால அழுதுட்ருப்பாங்க.. 

“ஏங்க…. நம்ப தம்பி இப்போ போறேன், அப்போ போறேன்னு சொல்லிகிட்டே இருக்காப்ல ஆனா ஒன்னும் போற மாறியே தெரியலையே, நம்ப அனந்தன் பையன் அமெரிக்கால இருக்கான், சகுந்தலா பொண்ணு சௌதில இருக்கான்னு”……!!!!
      ‐சாயங்காலம் காப்பிய குடிச்சிட்டே வீட்டுக்கு வந்த ஒரம்ப‌ற அளப்பறய குடுத்திட்டிருப்பாங்க…

  "ஆன்சைட்" ‐ மென்பொருள் துறையினரின் வாழ்வில் தவிர்க்க முடியாத, மிகவும் அவசியமான, அத்யா"வசியமான" ஒரு வார்த்தை.

 சரி, ஆன்சைட்னா என்னாங்க?

ரொம்ப சிம்பிளா சொல்லனும்னா.. வெள்ளக்காரன் தான் நமக்கெல்லாம் படி அளக்கற சாமி, அவனுக்கு ஒரு வேல ஆகனும்னா…இந்த மாதிரி, இந்த மாதிரி வேல ஆகனும்னு அவன் டெண்டர் மாதிரி விடுவான். உடனே நம்மூர்ல இருக்கற கம்பேனி எல்லாம் வழக்கம் போல அடிச்சு புடிச்சு மன்னன் படத்துல வர்ர‌ ரஜினி, கவுண்டமணி மாதிரி  “எனக்கு செய்னு, எனக்கு மோதரம்னு” அடிச்சிகிட்டு, அப்புறம் கெடைக்கற பீஸ் ஆப் ப்ராஜெக்ட வெச்சுகிட்டு ஒரு வழியா புது ப்ராஜெக்டுக்கு பூஜையைப்போட்ருவாங்க. அது 20 பேரு செஞ்சு முடிக்கற வேலையா இருந்தா மொதல்ல ஒரு ரெண்டு பேர அந்த நாட்டுக்கு அனுப்பி அவனுக்கு என்னென்ன வேணும், எப்டெப்டி வேணும்னு பக்கத்துலேய இருந்து விசாரிச்சிட்டு அங்கிருந்துட்டே நம்மூர்ல இருக்கற ஒரு 8 பேர் கிட்டே வேலைய (உயிர) வாங்கற process தான் Onsite‐Offshore co‐ordination.

 இந்த ரெண்டு க்ரூப்க்கும் மாமியார் மருமக மாதிரி எப்பவுமே ஏழாம் பொருத்தம்தான். இவன கேட்டா அவன் ஓபி அடிக்கறாம்பான், அவன கேட்டா இவன் ஓபி அடிக்கறாம்பான். கடைசி வரைக்கும் சித்தி சீரியல்ல வர்ற சாரதா, பிரபாவதி மாதிரி பொகஞ்சுகிட்டே இருப்பாங்க.

 இப்போ அந்த வெளிநாடு போற ரெண்டு பேரு யாருங்கறதுதான் இங்க மேட்டர்…

சரி, அப்படி போறதுனால என்னங்க ?…

நல்லா கேட்டிங்க போங்க...

 ** இங்க அஞ்சு மாசம் சம்பாதிக்கறத அங்க ஒரே மாசத்துல சம்பாதிச்சிரலாம்!.
 ** நம்ப negotiation skills ம், business communication ம் நல்லா இம்ப்ரூவ் ஆகும்!.
 ** நமக்கு வேலை ரீதியாவும், சமுதாய(கல்யாண சந்தை) ரீதியாவும் நல்ல மரியாதை கிடைக்கும்.
 ** இங்க நம்ம உருவகமா பார்த்து தெரிஞ்சுகிட்ட சில பல விசயங்கள அங்க உருவமா பார்க்கலாம்… ( அட, நான் வேலை சம்பந்தமாதாங்க சொல்றேன்.) 

அப்பறம் பெருசா ஒன்னுமில்லீங்க, நம்பளும் இந்த central park, சுதந்திர தேவி சிலை, டவர், பிரிட்ஜ், பிரமிட், ரோடு இந்த மாதிரி பல எடங்கள்ல சம்பரதாயமா நின்னு கேமராவ மொறச்சு பார்த்து சில ஸ்டில்லு, பல செல்ஃபிகல எடுத்து மொத வேலயா ஃபேஸ்புக்குலயோ, வாட்ஸாப்புலயோ, பிக்காசலேயா போட்டு ஊர் வாயில விழுக வேண்டியதுதான்.

இங்க அவனவன் 38 degree வெயில்ல காஞ்சிட்டு இருப்பான் அங்க நம்பாளு சுவிஸ்ல ஜெர்கின போட்டுட்டு snow-ல வெளயாடறா மாதிரி போட்டோவ போட்டு பொகைய கெளப்புவான்.

மேனேஜ்மென்டை பொறுத்த வரை ஒரு resource-அ ஆன்சைட் அனுப்பறதுங்கறது பொம்பள புள்ளைய கட்டிக் குடுக்கற மாதிரிதான், "மூத்தவ நல்லா பாடுவா, சமையல் சுமாராத்தான் பண்ணுவா, போகப்போக பழகிரும், மத்தபடி போற எடத்துல எப்படி இருக்கணும்னு சொல்லி வளத்திருக்கம்"ங்கற மாதிரி, இவருக்கு ஆன தெரியும் குதர தெரியும்னு கிளையன்ட்கிட்ட சொல்லி எப்படியாவது ஆன்சைட் அனுப்பிருவாங்க.

 "அதெப்டிங்க பெரியவள வீட்ல வெச்சுகிட்டு சின்னவள கட்டி குடுத்தா ஊரு தப்பா பேசாதுங்களா"ங்கற மாதிரி சீனியர் resourse-அ வச்சு கிட்டு ஜூனியர் resourse யும் ஆன்சைட் அனுப்ப மாட்டாங்க.

 Project வந்ததுக்கப்புறம் போன்ல கூப்பிட்டு ”நம்ப கிட்ட ஏற்கெனவே குழாய்வழியா (Pipeline-ல) இருந்த “வருமோவராதோ” Project வந்திருக்கு. நீங்க கெளம்பறதுக்கு தயாராகிக்கோங்கன்னு ஒரு 10 பேரு கிட்ட தனித்தனியா சொல்லுவாங்க, இவனுகளும் "நெசமாத்தான் சொல்றியா"னு ஆனந்தி மாதிரி கேட்டுக்கிட்டு, உடனே ஷாட்ட இங்க கட் பண்ணி ஃபாரின்ல ஓபன் பண்ணிருவானுக. ஒரு ரெண்டு வாரத்துக்கு தரையிலயே நடக்க மாட்டானுக. பில்லா படத்துல வர்ற மாதிரி ரீ‍‍-ரெகார்டிங் இல்லாமயே நடப்பானுக, திரும்புவானுக, பாப்பானுக. மேல இருந்து கூப்பிட்டு தவிர்க்க முடியாத சில காரணங்களால வேறு ஒருத்தர் போறாரு நீங்க கொஞ்ச நாளைக்கு “ஏங்கடாபோங்கடா” ப்ராஜெக்ட‌ கன்டினியூ பண்ணுங்கன்னு சொன்னதுக்கப்புறம் தான் “I am Back” ன்னு தரைக்கே வருவாங்க.

அப்பறம் கொஞ்ச நாளைக்கு “வார்த்தை தவறிவிட்டாய்”ன்னு ஸ்லோமோஷன்ல நடக்க ஆரம்பிச்சிருவானுக!! ..

ஒரு ப்ராஜெக்ட் புதுசா வருதுன்னாலே, எல்லார் வாயிலயும் அவுல போட்ட மாதிரி ஆயிரும், அவன் போவான்- இவன் போவான்னு எல்லாரும் கெழக்க பார்த்திட்டு இருந்தா மேக்க ஒருத்தன் மொதல்லயே கெளம்பி போயிருப்பான். 

“ஒன் டே Match-ல ரெய்னாவுக்கு பதில லஷ்மணனை எதுக்கு எடுத்தாங்க” ங்கற மாதிரி ஆக்ரோசமா ஆறு நாளைக்கு அதப்பத்தி பேசிட்டு அதுக்கப்புறம் ஆறாவது நாள் அவங்கவங்க வேலைய அமைதியா பாக்க ஆரம்பிச்சிருவாங்க.
மேல இருக்கறவங்க, முதல்வன்ல ரகுவரன் சொல்ற மாதிரி அகலாது அணுகாது ஒரு தொலைநோக்கு பார்வையோட பாத்து ஒரு பொதுவான முடிவாத்தான் எடுப்பாங்க.


 ஆன்சைட் போனவன் “அக்கறை சீமை அழகினிலே”, "நியூயார்க் நகரம் உறங்கும் நேரம்”னு பாடிக்கிட்டு அந்த கெத்த அப்படியே மெயின்டெயின் பண்ணிகிட்டிருப்பான். நம்பாளு “சொர்க்கமே என்றாலும் அது நம்மூர போல வருமா”, “இந்திய நாடு நம் நாடு, இந்தியன் என்பது என்பேரு” ன்னு காந்தியவாதி ரேஞ்சுல பீலிங்ச போட்டுட்டு அவர அவரே ஆறுதல் படுத்திக்குவாரு.


 சரி இப்போ ஒருத்தன(பேச்சுலர) செலக்ட் பண்ணிட்டாங்கன்னு வெச்சுகோங்க. மொதல்ல அவன் work permit எடுக்கணும் அப்பறம் visa எடுக்கணும்.. இதுக்கான காலக்கெடு நம்ப போற நாட்ட பொறுத்து மாறும். US னா ஒரு வருஷம் ஆகும் (அது வரைக்கும் நம்பளே இருக்கோமோ இல்லையோ) Uk னா ஒரு மாசம் ஆகும். நூத்துக்கு எண்பது சதவீதம் US இல்ல UK ல தான் ஆன்சைட் அமையும்.

இதுல US விசா எடுக்கறதுல மட்டும் ஒரு உயரமானவெளிச்சம்(highlight) என்னன்னா ஒரு கம்பேனி எத்தன விசாவ consulate ல submit பண்ணாலும், வருசத்துக்கு இவ்ளோ பேரைத்தான் அனுப்புவாங்கன்னு ஒரு கணக்கு இருக்கு. அதனால சிக்கிம் சூப்பர், பூட்டான், மணிப்பூர் லாட்டரி மாதிரி computerised லாட்டரி சிஸ்டத்துல செலக்ட் பண்ணுவாங்க அப்புறம் இன்னார் இன்னார் செலக்ட் ஆயிட்டாங்கன்னு சேதி வரும்.

இந்த லாட்டரில பேரு வரதுக்குள்ள அவனவன் படர பாடு இருக்கே.

அறிஞர் அண்ணா சொன்ன மாதிரி “விழுந்தா வீட்டுக்கு விழாட்டா நாட்டுக்கு"ன்னு இருக்கறவன் சந்தோசமா இருப்பான்.

 “இந்த சாப்ட்வேர் வேல எனக்கு புடிச்சிருந்துச்சு, என் பேரு அன்புசெல்வன், இந்த US என்னோட 25 வருஷ கனவு, தவம்”னு கௌதம் மேனன் பட ஹீரோ கணக்கா டயலாக் விடறவனெல்லாம் கொஞ்ச நாளைக்கு குவாட்டர் அடிச்ச கொரங்கு மாதிரியே திரியுவானுக!

அதுக்கும் பொறகு consulateகாரன் நாள் குறிச்சி கூப்புட்டனுப்புச்சு, ஏன் போற, எதுக்குப்போறேன்னு விதி படத்துல டைகர் தயாநிதிய சுஜாதா கேக்கிற மாதிரி நச் நச்‍னு கேட்டு, நமுக்கா கொடஞ்சு, குமுக்குனு நம்ப பாஸ்போர்ட்ல ஒரு குத்து குத்துனாதான் நம்ப பயலுக லேசா சிரிப்பானுக, இல்லேனா மந்திரிச்சு உட்ட கோழி மாதிரி ஆயிருவானுக!

 சரி ஒரு வழியா விசா கிடச்சிருச்சுனா. மொதல்ல நமக்காக சொன்ன Project  இன்னும் நமக்காத்தான் இருக்கான்னு பாக்கணும். இல்லேன்னா "அடுத்த பஸ் வெடியால அஞ்சுமணிக்குத்தான் அதுவரைக்கும் இப்படி ஓரமா உக்காந்துக்கப்பா"ன்னு கிராமத்துல எல்லாம் சொல்ற மாதிரி அடுத்த project வர்ற வரைக்கும் பேசாம உக்காந்திருக்க வேண்டியதுதான். இல்ல சினிமால சொல்றாப்ல “உனக்கு அவதான், அவளுக்கு நீ தான்னு சின்ன வயசுலேயே முடிவாயிருச்சு” ங்கற மாதிரி நம்ம நேரம் வொர்க் அவுட் ஆயிருச்சுன்னா டபுள் ஓகே.

இப்போ அடுத்து கிளையன்ட் எப்போ கூப்பிடுவான்னு காத்திருக்கணும். அப்ப‌டியே தோராயமா எப்போ கெளம்பறோங்கறத நம்ப மேலதிகாரிங்ககிட்ட கேக்க வேண்டியதுதான். அவங்களும் monday கெளம்பற மாதிரி பாத்துக்கோங்கன்னு சொல்லுவாங்க, ஆனா எந்த monday னு அவங்களும் சொல்ல மாட்டாங்க, நாமளும் கேக்க மாட்டோம்.

வாரக்கணக்கு நாள்கணக்கு ஆனவுடனே நம்பளும் இந்த தடவ கெளம்பிருவோம்போல தெரியுதேன்னு பர்ச்சேசிங்கையும், பாக்கிங்கையும் ஆரம்பிச்சுருவோம். Financial settlement கள், சிம் கார்டு சரண்டர்கள்னு நாட்கள் பரபரப்பா போயிட்டிருக்கும்.

இதுக்கெடைல நம்ப பாசக்கார பயபுள்ளைக அப்பப்போ போன் பண்ணி "மாப்ள, கண்டவெனல்லாம் சொல்லி நீ ஆன்சைட் போறது எனக்கு தெரியவேண்டி இருக்கு"ன்னு பீலிங்க வேற போடுவானுக. இதுல என்ன கொடுமைனா ஏற்கனவே ரெண்டு தடவ வெறும் டாட்டா மட்டும் சொல்லி பல்பு வாங்குனது அவனுக்கும் நல்லாவே தெரியும்.


 திடீர்னு ஒரு சண்டே நம்ப பெத்தவங்க ஊர்ல இருந்து பாசம், கவலை, பெருமிதம் எல்லாம் கலந்த ஒரு கலவையா வந்து நிப்பாங்க. அவங்களுக்கு என்னன்னா நாம ஏதோ வெளிநாட்டுல போய் ராக்கெட் செஞ்சு சந்திர மண்டலத்துல உடற மாதிரி நெனச்சுக்குவாங்க. அங்க போய் நாம எந்த மாதிரி வேலய பாப்போங்கறது நமக்குதான தெரியும்.

 ஆனா ஒன்னுங்க, இன்னிய வைரக்கும் அவங்க வந்தன்னைக்கு நம்பல சென்ட் ஆப் பண்ணதா வரலாறு‐பூகோளம்‐புவியியல் எதுவுமே இல்லைங்க.

 சரி அவங்களும் தாமதமான சந்தோஷம்னு நம்மளோட கொஞ்ச நாள் இருக்க ஆசப்படுவாங்க. ஆனா அந்த பரபரப்புல ரெண்டு நிமிஷம் கூட அவங்களோட‌ சந்தோசமா உக்காந்து பேச முடியாது.

 நாள்க்கணக்கு மணிக்கணக்கா ஆயிரும். கெளம்ப வேண்டிய கடைசி நாளும் வந்திரும்.

அந்த கடைசி நாள் "இந்தியா ‍பாகிஸ்தான் பைனல் ஓவர் மாதிரி, எப்படி 40 ஓவர்ல ஜெயிக்க வேண்டிய மேட்ச்ச 50வது ஓவர்ல நெகத்த கடிக்க வெச்சு ஜெயிப்பாங்களோ, அதே மாதிரி தான். ஒவ்வொருத்தரையா புடிச்சு தொங்கி எல்லா formalities ஐயும் முடிச்சிட்டு, அடிச்சு புடிச்சு பிளைட் டிக்கெட்டையும், உருண்டு பொரண்டு ஊர் காசையும் வாங்கிட்டு கடைசியா செய்ய வேண்டிய சீரு,அதாங்க நம்மோட கலீக்ஸ் மற்றும் நண்பர்களுக்கு treat குடுத்திட்டு, அப்படியே சின்னதா ஒரு தற்காலிக பிரிவு உபசார விழாவுல கலந்த்துகிட்டு, கேக்க வெட்டி மூஞ்சில அப்பிகிட்டு, மேலதிகாரிங்க கிட்ட புத்திமதிகள மறக்காம வாங்கி(கட்டி)ட்டு (”மச்சி, இன்னிக்காவ‌து எப்படியாச்சும் அவகிட்ட சொல்லிடு”… கதைகளும் கேப்புல கெடாவெட்டிட்டு தான் இருக்கும்) வீட்டுக்கு வந்ததுக்கு அப்பறம் தான் நம்பளுக்கே லைட்டா ஒரு நம்பிக்கை வரும்.

அதுதான் எல்லாம் கெடச்சிருச்சே அப்பறம் என்ன லைட்டான்னு கேப்பீங்க. இங்கயும் ஒரு ட்விஸ்ட் இருக்கு, ஏன்னா இந்த மாதிரி சாயங்காலம் ட்ரீட் குடுத்துட்டு சந்தோசமா டாட்டா சொல்லிட்டு போன பலபேரு காலைல நமக்கு முன்னால ஆபீஸ்ல ஒரு டேப்பரா (டேப்பரான்னா, தவமாய் தவமிருந்து படத்துல சேரனோட‌ மெட்ராஸ் வீட்ல எதிர்பாராம நம்ப ராஜ்கிரண் ஒரு சைசா உக்காந்திருப்பாப்லல்ல அந்த மாதிரி) உக்காந்திட்டு இருந்த கதையெல்லாம் நெறய இருக்கு, அது பெரிய கொடுமைங்க, என்னாச்சு ஏதாச்சுன்னு பாக்கறவங்க எல்லாம் விசாரிக்க ஆரம்பிச்சிருவாங்க. இது பரவால்ல பம்பாய்ல கனெக்க்ஷன் ப்ளைட் ஏறப்போறவன போன் போட்டு கூப்பிட்டு, தம்பி கிளையன்ட் சைடுல ஏதோ சூனியம் ஆயிருச்சு, போனவரைக்கும் போதும் பொட்டாட்ட‌ம் திரும்பி வந்திருன்னு சொல்லிருவாங்க.

அது சேரி நமக்கு நேரம் சரியில்லேன்னா ஒட்டகத்து மேல ஏறி உக்காந்தாலும் நாய் கடிக்கத்தான செய்யும்.  இதுனால நமக்குள்ள எப்பவுமே ஒரு பயப்பட்சி நொண்டி அடிச்சுகிட்டே இருக்கும். இந்த தடவையாவது எல்லாம் சரியா நடக்கனும்னு இல்லாத சாமிய மனசு வேண்ட ஆரம்பிச்சிரும்.

 நம்ப நலம் விரும்பிகள், நண்பர்கள்னு ஒவ்வொருத்தரா வந்து பயணத்துக்கான துணுக்குகளையும், நடந்துக்க வேண்டிய வழிமுறையையும் சொல்லி குடுத்துட்டே கடைசி வரைக்கும் கூட இருப்பாங்க. நீங்க என்னதான் பட்டியல் போட்டு செக் பண்ணிகிட்டாலும் கெளம்பற வரைக்கும் அத வாங்கிட்டியா, இத வாங்கிட்டியான்னு லிஸ்ட் நீண்டுகிட்டே போகும். கெடைக்கறதெல்லாம் போட்டு அமுக்கி சதுரமா வாங்குன பெட்டி அமீபா மாதிரி ஆயிரும்.

விடியக்காலம் ப்ளைட்டுனா ராத்திரி பதினொரு மணி வரைக்கும் மசமசப்பாவே இருக்கும். அதுக்கப்புறம் தான் நம்ப பெத்தவங்களோட கொஞ்சம் நேரம் மனம் விட்டு பேச முடியும்!

இதெல்லாம் இப்படி இருக்க ஊர்ல இருந்து நம்ப அம்மாச்சி போன போட்டு “உனக்கு தண்ணில கண்டம்னு உடுமல ஜோசியர் சொல்லிருக்காரு, நீ தண்ணி பக்கமே போகாத, போற பக்கம் பாத்து சூதானமா இருந்துக்கோ, வம்பு தும்புக்கு போகாத சாமி"ன்னு பத்து வருசமா சொல்ற அதே அறிவுரைய சொல்லும். சில பேரெல்லாம் அவுங்க தாத்தா பாட்டி கிட்ட பேசும்போது கைக்கொழந்தயாவே மாறி அப்புடியே தவழ்ந்துருவாங்க.

 மனசெல்லாம் பாரமாகி அப்படியே ஒரு ரெண்டு மணி நேரம் கண்ணசந்தம்ன்னா. “ஏண்டா ப்ளைட்ட நீ புடிக்கனுமா நாங்க புடிக்கனுமா? ப்ளைட்ல போய் தூங்கிக்கலாம் மொதல்ல எந்திரி”ன்னு எக்கோல ஒரு குரல் கேக்கும், முழிச்சு பாத்தா நம்பப்பா சும்மா புது மாப்ள மாதிரி ஜம்முனு கெளம்பி ரெடியா இருப்பாரு! கண் எரிச்சலோட நம்ப நண்பர்கள் புடை சூழ ஒரு ரெண்டு மணி நேரத்துக்கு முன்னாடியே ஏர்போர்ட் போயிருவோம். டிக்கெட்ல அப்படித்தான் போட்ருக்கும்.


நம்ப பாசக்காரப் பசங்க எப்பவுமே ஸ்வீட் பாக்ஸ கிலோ கணக்குல வாங்கி குடுப்பானுக. ஏன்னா ப்ளைட்ல போறதுக்கு முன்னாடி இவ்ளோதான் லக்கேஜ் எடுத்திட்டு போகணும்னு ஒரு கணக்கு உண்டு. அதிகம் ஆகி, 3 கிலோவ எடுத்திருங்கன்னு சொன்னா, ”மச்சி அந்த மைசூர் பாகும், பிஸ்தா கேக்கும் சரியா மூணு கிலோ வராது? ன்னு நல்லவனுக மாதிரியே கேப்பானுக!! இதுவும் கூட ஒரு வகையான Give and take policy தான்.


 மணிக்கணக்கு நிமிசக்கணக்காயி, சட்டுன்னு சூழ்நிலை அப்படியே சேது கிளைமாக்ஸ் மாதிரி ஆயிரும்.

பெத்தவங்க லைட்டா கலங்கி நிப்பாங்க.
பயலுக வேற திடீர்னு ஏதோ சந்தானம் சூர்யாவுக்கு அட்வைஸ் பண்ணற மாதிரி “மச்சி பாத்துக்கோடா"ன்னு ஒரு மாதிரியான வாய்ஸ்ல பேசுவானுக!

நிமிசக்கணக்கு நொடிக்கணக்காயிடும்… மௌனத்தின் சத்தம் மட்டுமே கேட்கும் தருணமது!

கடைசி நொடியில்,

அம்மாவிடம் இருந்து சில வருட இடைவெளிக்குப்பிறகு ஒரு அன்பு முத்தம்…
ஆருயிர் நண்பர்களின் கதகதப்பான தழுவல்கள்…

யாருக்கும் கண்களில் கண்ணீர்முட்டும் தருணமது!!

கனத்த இதயத்துடன் எல்லாருக்கும் கையசத்து விடை கொடுத்துவிட்டு. எல்லா செக்யூரிட்டி, இமிக்ரேசன் சம்பிரதாயங்களையும் முடித்து விட்டு loungeல் ஒரு மணிநேரம் காத்திருப்போம்.

அப்போது தான் நாம் தனிமைப்பட்டதை உணர்வோம்.
ஒரு வெறுமை வந்து மனதை ஆக்ரமித்துக்கொள்ளும்.

சுருக்க சொல்லப்போனால்...

"நமக்குப்பிடித்த உண்மையான நம்மை வெளியே தற்காலிகமாக தொலைத்து விட்டு மாயமான புது மனிதனாய், புதிய ஊருக்கு, புதிய கலாச்சாரத்திற்கு, புது உறவுகளுக்கு நம்மை, நமக்கே தெரியாமல் அர்ப்பணிக்க தயாராகி விடுவோம்".

நாம் கண்டிப்பாக நிறைய சந்தோசமான தருணங்களை (உறவினர்கள் மற்றும், நண்பர்களின் திருமணங்கள், சொந்தவூர்ப்பண்டிகைகள், பங்காளிப்பஞ்சாயத்து, காவிரிக்குளியல், காலை நேர FM, மாலை நேர சீரியல், வயக்காடு கிரிக்கெட், இரவு நேர அர்த்தமில்லா அரட்டைகள், பைக்கின் நகர்வலம் இப்படி நிறைய) தவறவிடுவோம்.

கடைசி நேர போன்களில் நேரம் கரைந்து கொண்டிருக்கும்.

ஒரு வழியாக ப்ளைட்டில் போர்டு ஆகி வயிற்றுந்துதலுடன் மெலெழும் போது நகரம் ஒரு புள்ளியாகி பதினைந்தே நிமிடங்களில் வெறும் மேகம் மட்டுமே நம் மனதைப்போலவே வெறுமையாக புலப்படும்.

 (சரி…புரியுது… என்னங்க பண்றது, நமக்குள்ள எப்பவுமே ஒரு தங்கர்பச்சான் தவழ்ந்துட்டே இருக்காப்புள‌!!..)

சில பேரு வெளிய ப்ளைட் சீட்ல வால்ட‌ர் வெற்றிவேல் மாதிரி வெறப்பா இருந்துட்டு உள்ள வந்து டாய்லெட்ல "துள்ளாத மனமும் துள்ளும்" விஜய் மாதிரி தேம்பித்தேம்பி அழுதிட்டு இருப்பானுக.

 சில பேரு இந்த LKG ஸ்கூல்ல மொத நாள் கொழந்தைக உக்காந்திருக்குமே "தேமே‍"னு அதே மாதிரியே கடைசி வரைக்கும் உக்காந்திருப்பானுக.

 சில பேரு காஞ்ச மாடு கம்புல பூந்த மாதிரி ஒயின், விஸ்கின்னு கெடைக்கறதெல்லாம் வாங்கி,கலக்க வேண்டாம் அப்படியே சாப்பிடுவேன்னு ராவுடி பண்ணிட்டு இருப்பாங்க.

சத்தமே இல்லாம சில பேரு சைலன்ட்டா இருப்பான், என்னடான்னு பாத்தா பக்கத்து சீட்ல பளிங்கு மாதிரி ஒரு பொண்ணு உக்காந்திருக்கும். ஊர்ல குண்டாவுல ஊத்தி குடிக்கறவனா இருப்பான், ட்ரிங்க்ஸ் சர்வ் பண்ணா, ஏதோ வேப்பெண்ணய குடிக்க சொன்ன மாதிரி மூஞ்சிய வெச்சுகிட்டு "நோ தாங்க்ஸ்.. ஐ யம் நாட் யூஸட் டு இட்”ன்னு சைடுல பாத்தபடியே ஒரு கோல போடுவான். அவ படக்குனு  ரெண்டு லார்ஜ் வாங்கி மடக்குனு குடிச்சிட்டு, வழக்கம் போல இவன மதிக்காம டான்பிரவுன் புக்க படிக்க ஆரம்பிச்சிருவா, நம்மாளு, வட போச்சேனு வின்டோவ பாக்க ஆரம்பிச்சுடுவான்.

பாதி தூக்கம், ஒரு படம், கொஞ்சம் இ[ம்]சைனு, நாம எறங்க வேண்டிய ஊரு வந்திரும் ( USA ன்னு வெச்சுப்போம் ‐ "ஏன் மாஸ்டர் எப்பவும் இதே ஸ்டெப்ப போட்றீங்க, இது ஒன்னுதான எனக்கு தெரியும்".)

லக்கேஜ் கலெக்ட் பண்ணலாம்னு போனா, கன்வேயர்ல வர எல்லா பொட்டியும் காக்காவாட்டம் ஒரே மாதிரி இருக்கும். ஒரு வழியா நம்ப பொட்டிய கரக்டா கண்டுபுடிச்சு எடுத்திட்டு அடுத்த முக்கியமான கட்டத்துக்கு போகணும்.  அந்த ஊரு இமிக்ரேசன் செக்கிங்..

 நம்மளே "தீபாவளிக்கு திருடப்பட்டு வந்த கோழி மாதிரி" முழிச்சிட்டு நிப்போம், அப்போ ஒரு ஜாக்சன் அங்கிள் லோக்கல் ஆக்சன்ட்ல கேள்வி கேப்பாரு.

 “!@#!# %$^#@#!@# ^%#$%&^* ^#$@#@”

 (என்னது கொழாய்ல....ல... தண்ணி வரலயா? ) "பார்டன் மீ..

" “!@#!# %$^#@#!@# ^%#$%&^* ^#$@#@”

 (என்னது எம்.ஜி.ஆர் உயிரோட இருக்காரா?) "பார்டன் மீ.."

 “!@#!# %$^#@#!@# ^%#$%&^* ^#$@#@”

 ஓ….ஐ வொர்க் ஃபார்……. (இப்போ தான் இதயே சொல்லிருக்கோம், மொத்தமும் சொல்றதுக்குள்ள.. வெடிஞ்சிரும்.)

 "பார்டன் மீ, பார்டன் மீ"ன்னு பத்து தடவ பாட்டு பாடி,
"எக்ஸ்கியூஸ் மீ, எக்ஸ்கியூஸ் மீ"ன்னு எட்டு தடவ எகத்தாளம் பண்ணி, பிங்கர் பிரிண்ட் வெச்சு,
போட்டோக்கு போஸ் குடுத்து,
ஒரு வழியா கேட்ட கேள்விக்கு சரியான பதில சொல்லி, அவன் சீல் குத்தறதுக்குள்ள நமக்கு "தாத்தா தெரியராரு,தாத்தா தெரியராரு" நெலமதான். 

அப்புறம், நம்பல கூட்டிட்டு போக நம்ப நண்பர் யாராவது வந்திருந்தா விசேசம், இல்லேனா குஷ்டந்தான், திருவிழால காணாம போன திருவாத்தான் மாதிரி முழிச்சுகிட்டு நிக்க வேண்டியது தான். அங்க எல்லாம் தெள்ளத்தெளிவா படம் போட்டு காட்டிருப்பான்.(நமக்குதான் பகல்லயே பசுமாடு தெரியாதே, இருட்டுலயா எரும மாடு தெரியப்போகுது.) தட்டுத்தடுமாறி டாக்ஸி புடிச்சு நம்ப கலீக்கோட ரூமுக்கோ, இல்லேனா அவரு முன்கூட்டியே ஏற்பாடு பண்ணிருக்கற ரூம்ல போயி புது நண்பர்களோட‌ ஐக்கியமாயிர வேண்டியதுதான்.

ஆன்சைட்ல வாழ அடிப்படையான விஷயங்கள்:

** உணவு, உடை, உறைவிடம் அப்பறம் பிராட்பேண்ட் கனக்க்ஷ‌னோட ஒரு லேப்டாப்.
 நம்ம டிவி, ரேடியோ, மியூசிக் பிளேயர், விளையாட்டு மைதானம், சினிமா தியேட்டர், புத்தகம்,நியூஸ் பேப்பர் எல்லாமே அதுதான்.  சாயங்காலம் வந்த உடனே சாணி போட்ட மாதிரி அப்படியே சத்‍-துனு உக்காந்திர வேண்டியதுதான்.

அப்புறம் சராசரி தமிழனை உறுத்தற ரெண்டு விஷயங்கள்:

 1. டாய்லெட்டில் டிஸ்யூ பேப்பர்..
             நம்மூர்ல பேப்பர்னா சரஸ்வதிங்கறம், கால்ல பட்டாவே, பத்துதடவ தொட்டு கும்புடுவம். 

2. காலநிலை மாற்றம்..
           வெயில் காலத்துல வெளிச்சமும், குளிர் காலத்துல இருட்டும் ஜாஸ்த்தியா இருக்கும்.
            நீங்க சாயங்காலம் எவ்ளோ லேட்டா வீட்டுக்கு வந்தாலும் நேரத்துலயே வந்த மாதிரி ஃப்ரெஷ்சாவே இருக்கும். ஏன்னா வெயில் காலத்துல பத்துமணிக்கு தான் கொஞ்சம் லைட்டா இருட்டும். நைட் கொஞ்சம் லேட்டா பசங்களோட‌ பேசிட்டு இருந்தம்னா திடீர்னு விடிஞ்சிரும்.
       
           குளிர் காலத்துல இதுக்கு நேர்மாறு, மதியம் 3 மணிக்கெல்லாம் இருட்டீரும். எப்பவுமே நைட் ஷிப்ட்ல இருக்கற பீலிங் இருக்கும். கன்னிப்பொண்ணு மனசு மாதிரியே வானிலை இருக்கும், பத்து நிமிஷம் அப்படியே இருட்டு கட்டி மழ பெய்யும், அப்புறம் பாத்தா "இன்னிக்கா அப்படிப்பாத்தம்"ங்கறா மாதிரி சுள்ளுன்னு வெயிலடிக்கும்.


 வேல ரீதியா பாத்தா ஒன்னும் பெருசா வித்தியாசம் இருக்காது. அதே வேல, ஆனா வெள்ளைக்கார மொதலாளி. நமக்கு கிளையன்ட் நல்லபடியா அமையனும் அது ரொம்ப முக்கியம், அத விட முக்கியம் offshore team (அந்த எட்டு பேரு) சரியா வாய்க்கனும் இல்லேனா சிக்கி சீரழிய வேண்டியதுதான், விடிய விடிய உக்காந்து ட்ரான்ஸ்சிசன் குடுத்திட்டு காலைல திரும்ப வந்து கேட்டா “ராமனுக்கு பொண்டாட்டி ரம்பா”ன்னு சொல்லுவான் அகராதி புடிச்ச பயபுள்ள.


நம்ப வீட்டுல இருக்கறவங்க அடிக்கடி கேக்கற கேள்வி,

 “அங்க எல்லாம் கெடைக்குமாப்பா??”..
           - பொன்னி அரிசிலேருந்து முருங்கக்கீரை வரைக்கும் தரமான பொருளாவே நமக்கு கெடைக்கும்.


 பய, ஊர்ல கால்ல பட்ற பாத்தரத்த கூட எடுத்து வெக்க மாட்டான் இங்க வந்து குமிஞ்சு கோலம் போடறத தவிர எல்லா வேலயும் துல்லியமா செய்வான்! வேற வழி?

 நம்முடைய புதிய பொழுதுபோக்குகளில் சமையலும் கண்டிப்பா சேர்ந்திருக்கும். குழிப்பனியாரம், கொழுக்கட்டை, பருப்பு வடை, பாயசம்ன்னு பயலுக நொறுக்குவானுக. ஆனா சும்மா சொல்லக்கூடாதுங்க, சில பொண்ணுகள விட பசங்க ரொம்ப நல்லாவே சமைப்பானுக.

 பசங்க நாலு பேரு ஒரே வீட்ல‌ இருந்தாலும் கூட, ஒரு அடுப்புதான் எரியும், ஆனா பொண்ணுக வீட்டுல கொறஞ்சது ரெண்டு அடுப்பாவது எரியும்.

சரீ, பிரச்சன திசை மாறுது…

 அங்க போயும் நம்பாளுக்கு பூ பூக்க ஆரம்பிச்சிரும். “மச்சி, நான் சொல்ல‌லே என்னோட தேவதைன்னு, அங்க பார்ரா "பனியில நனஞ்ச புஷ்பம் மாதிரி” ன்னு சொல்லிகிட்டிருக்கும் போதே அவனோட அந்த வெள்ளைக்கார தேவத நல்லா பத்து செண்டி மீட்டர்ல ஒரு சிகரட்ட எடுத்து பத்தவெக்கும்… அசிங்கத்த மிதிச்ச மாதிரி அலறி ஓடி, அப்புறமாதான் அடங்குவான்…

 வெள்ளக்கார‌ன பொருத்தவர ஒவ்வொரு வீக்கெண்டும் தீபாவளி மாதிரிதான். திங்கக்கிழமைலிருந்து வெள்ளிக்கிழமை வரைக்கும் கன்னுக்குட்டி மாதிரி சாதுவா இருப்பானுக. வெள்ளிக்கிழம சாயங்காலத்தில இருந்து காட்சில்லாவா மாறிருவானுக. 5 மணியில இருந்தே "கோட்டய விட்டு வேட்டைக்குப்போகும் கொடலமல சாமி"னு, அய்யனார் வேட்டைக்கு கெளம்பற மாதிரி டிசைன் டிசைனா ஆம்பள பொம்பள வித்யாசமில்லாம கெளம்புவாங்க. வேற எதுக்கு குடிச்சுட்டு கூத்தடிக்கத்தான்.

 நம்ப ஊர்ல பொண்ணுக நம்பல கண்டாவே “அதுங்க வந்திருச்சுன்னு” ஜுராசிக் பார்க்ல ஓடற மாதிரி ஓடுவாங்க…இங்க நெலமை நேர்மாறு நாலு பொண்ணுக கூட்டமா வந்தா நாயப்பாத்து ஒதுங்கற மாதிரி தப்பிச்சு ஓடிரனும். இல்லேனா ஆகற சேதாரத்துக்கு கம்பேனி பொறுப்பில்லீங்க!!


 இந்த ஆச்சர்யம், திகைப்பெல்லாம் மொத ரெண்டு மாசத்துக்குத்தான்.

ஐஸ்வர்யாராயே பொண்டாட்டியா வந்தாலும், அந்த பெருமை, சந்தோசமல்லாம் கொஞ்ச நாளைக்குத்தான். அப்புறம் அவ ஒழுங்கா சமைக்க மாட்டேங்கறா, ஒரு சைடா நடக்கறான்னு எதாவது கொற சொல்ல ஆரம்பிச்சிருவோம்.

பழகப்பழக பாலும் புளிக்குங்கற மாதிரி.....

"நம்ப மெக்கானிக்கல் வாழ்க்கை,
 எவனோ எழுதி வெச்ச time schedule-ல,
விருப்பு வெறுப்புகளை மறந்து,
இன்னொருத்தனோட வேலைக்காக ஓடி ஓடி, போர் அடிக்க ஆரம்பிச்சிரும்.

நாம ஊருக்கு திரும்பிப்போற நாளப்பத்தி கற்பனை பண்ண ஆரம்பிச்சிருவோம்.

 மொத்தத்துல இந்த நண்டு, சிண்டு, வண்டு "ஜெகன்" ஸ்டைல்ல சொல்லனும்னா,

ஆன்சைட்ன்றது பப்ளிக் டாய்லெட் மாதிரி, 

"உள்ள இருக்கறவன் வெளிய வரனும்னு நெனப்பான், 
வெளிய இருக்கறவன் உள்ள போகனும்னு நெனப்பான்."